திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது (22.01.2019)

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது.

கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் நேரில் பெற்று கொண்டார். இதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உதவி, திருமண உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 555 மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

கூட்டத்தில், நீர் நிலைகளில் மூழ்கி இறந்த 2 பேரின் குடும்பத்திற்கும் மற்றும் தீ விபத்தில் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.1 லட்சத்திற்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் வில்சன் ராஜசேகர், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் லாவண்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் அரிதாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை கலெக்டர் கந்தசாமி ஆட்டோ மற்றும் பஸ்களில் ஒட்டினார். இதில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், நகர அமைப்பு அலுவலர் திருமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பஸ் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் நின்று கொண்டிருந்த முதியவரை திருவண்ணாமலையில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்கவும், முதியோர் உதவித்தொகை வழங்கவும் கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.