திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்

சித்ரா பெளர்ணமியையொட்டி வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலில், மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கிரிவலம் செல்வர்.

இந்த சித்ரா பௌர்ணமி வரும் 26 ஆம் தேதி திங்கள் கிழமை பிற்பகல் 2.16 மணிக்கு துவங்கி மறுநாள் செவ்வாய்க் கிழமை காலை 9.59 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சித்ரா பெளர்ணமியையொட்டி வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விதித்து உத்தரவிட்டுள்ளர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சித்ரா பௌர்ணமியையொட்டி பக்தர்கள், பொதுமக்கள் யாரும் திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.